வழிபாடு

தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது

Published On 2022-12-24 07:42 GMT   |   Update On 2022-12-24 07:42 GMT
  • 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற இருக்கிறது.
  • 8-ந்தேதி தேவநாத சாமிக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பகல் பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியது.

இதையொட்டி பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமி புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகல்பத்து உற்சவத்தில் தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்றுமுறை நடைபெறும். இதில் வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து 2-ந்தேதி மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. மேலும் வருகிற 8-ந்தேதி தேவநாத சாமிக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News