வழிபாடு

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

Published On 2023-03-24 05:05 GMT   |   Update On 2023-03-24 05:05 GMT
  • 27-ந்தேதி கும்பாபிஷேகம் விழா நடக்கிறது.
  • ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில்.

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜர் இங்கு வந்து ஓம் நாமோ நாராயணா என உலகிற்கு உபதேசித்த சிறப்பு வாய்ந்தது இந்த கோவில். இத்தகைய சிறப்புபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து வருகிற 27-ந்தேதி காலை கும்பாபிஷேகம் விழா நடக்கிறது.

முன்னதாக நேற்று மாலை முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இரவு பூர்ணாகுதி நிகழச்சி நடைபெற்றது. இன்று, நாளை காலை இரண்டாம் காலமும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 25-ந் தேதி காலை நான்காம் கால யாகசால பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 26-ந்தேதி காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும், மாலை 3 மணிக்கு ஏழாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. வரும் 27-ந்தேதி காலை 8.5 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து கடம்புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9.38 மணி முதல் 10.32 மணிக்குள் கோவிலில் உள்ள சவுமிய நாராயண பெருமாள், திருமாமகள் தயார், ஆண்டாள் மற்றும் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. அதன் பின்னர் 11.50 மணிக்கு ஸ்வர் தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று இரவு 9 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் தங்க கருட வாகனத்திலும், திருக்கோஷ்டியூர் நம்பிகள் மற்றும் எம்பெருமானார் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News