வழிபாடு

குத்தாலம் புனித பிரான்சீஸ் சவேரியார் தேவாலய தேர்பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-07-03 04:07 GMT   |   Update On 2023-07-03 04:07 GMT
  • பக்தர்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்
  • கொடி இறக்கம் நடைபெற்று அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி மாம்புள்ளி கிராமத்தில் புனித பிரான்சீஸ் சவேரியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 28-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன், வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின்அலங்காரத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித பிரான்சீஸ் சவேரியார் எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் தேர்பவனி திருவிழா நடந்தது. முன்னதாக சவேரியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

முன்னதாக தங்கள் வீடுகள் தோறும் பக்தர்கள் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.மேலும் அதனைத் தொடர்ந்து நேற்று குத்தாலம் பங்குத் தந்தை ஜெர்லின் கார்ட்டர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்று இறைமக்கள் அனைவருக்கும் உணவு உபசரிப்பு நடந்தது.

இந்த நிகழ்வில் மாம்புள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை மாம்புள்ளி கிராம தலைவர்கள், கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News