வழிபாடு

சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்

Published On 2023-07-23 02:33 GMT   |   Update On 2023-07-23 02:33 GMT
  • ஆடித்தபசு விழா 31-ந்தேதி நடக்கிறது.
  • 31-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆடித்தபசு விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் புனிதநீர் எடுத்து வந்து கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு விழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கு கும்பாபிஷேகம், யாககேள்வி, தீபாராதனை, காலை 6 மணிக்கு அம்பாள் தபசு புறப்படுதல், 8.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வீதிஉலா வருதல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கரநாராயணராக கோமதி அம்மாளுக்கு காட்சி கொடுத்தல், இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News