வழிபாடு

பழனி முருகன் கோவிலில் ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழா

Published On 2022-09-16 04:01 GMT   |   Update On 2022-09-16 04:01 GMT
  • சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டது.
  • சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பழனி முருகன் கோவிலில், ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கார்த்திகை உற்சவ விழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதி வீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரெயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு மேல் தங்கரதத்திலும் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 82 பக்தர்கள், தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தேரை இழுத்தனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கார்த்திகை பூஜைகள் நேற்று நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடந்தது.

விழாவில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News