வழிபாடு

காரைக்குடி தூய சகாயமாதா ஆலய திருவிழாவையொட்டி மின்விளக்கு சப்பர பவனி

Published On 2022-08-22 05:24 GMT   |   Update On 2022-08-22 05:24 GMT
  • தொடர்ந்து நற்கருணைஆசி நடைபெற்றது.
  • இன்று திருவிழா நிறைவு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

காரைக்குடி செக்காலையில் உள்ள தூய சகாயமாதா ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று இரவு மின்விளக்கு சப்பர பவனி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு கலந்துகொண்டு அன்னையின் புகழ்பாடி மறையுரையாற்றினார்.

பங்குத்தந்தை எட்வின்ராயன், உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ்ராஜா மற்றும் அருட் தந்தையர்கள் கலந்துகொண்டனர். தேர் பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி தாலுகா அலுவலக சாலை, நூறடி சாலை, பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, கல்லூரி சாலை வழியாக வந்து மீண்டும் ஆலயத்தில் நிறைவு பெற்றது.

சப்பர பவனியின் போது பாடகர் குழுவினர் அன்னையின் புகழ்பாடியும், நற்செய்தி குழுவினர் நற்செய்தி வாசித்து ஜெபமாலை கூறியும் வந்தனர். தொடர்ந்து நற்கருணைஆசி நடைபெற்றது. இன்று திருவிழா நிறைவு திருப்பலி நிகழ்ச்சி பங்குத்தந்தையர்களோடு, சிவகங்கை மறை மாவட்ட ஆலோசகர் சூசைமாணிக்கம் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுக்கள், இளையோர் இயக்கத்தினர், கார்மேல்சபை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News