காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- காமாட்சி அம்மனை வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தேரோட்டத்தையொடடி சுமார் 30 நிமிடம் கண்கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் எராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி 9-ம் நாள் விழாவாக நேற்று இரவு வெள்ளித்தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. பச்சை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், பல்வேறு மலர் அலங்காரத்தில் காமாட்சி அம்மன், லட்சுமி-சரஸ்வதி உடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண பாடலுடன் காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.
ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொடடி கச்சபேஸ்வரர் கோவில் அருகே சுமார் 30 நிமிடம் கண்கவரும் வாணவேடிக்கை நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.