வழிபாடு

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி

Published On 2022-11-17 09:28 IST   |   Update On 2022-11-17 09:28:00 IST
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
  • காவிரியின் இரு கரைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைெபறுவது வழக்கம். அப்போது மாயூரநாதர், ஐயாறப்பர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு கடைமுக தீர்த்தவாரி நேற்று நடந்தது. மாயூரநாதர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெறவில்லை.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையிலும், தென்கரையில் திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சாமிகள் முன்னிலையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரியையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.

விழாவில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News