- கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார்.
- நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் நாமத்தை சொல்லியும் தீமையைவிட்டு விலகவில்லை என்றால், நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனிடத்தில் பங்கு இல்லை.
மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை
இஸ்ரவேல் நாட்டிலே ஆகாப் ராஜாவின் காலத்தில் நிலவிய பஞ்சத்தில் எலியாவை கர்த்தராகிய ஆண்டவர் கேரீத் ஆற்றங்கரையிலே காகங்களை கொண்டு போஷித்து வந்தார். (1 இராஜாக்கள் 17: 1-24).
காகங்கள் அவனுக்கு விடியற்காலம் மற்றும் சாயங்காலத்தில் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்தன. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரை குடித்தான். தேசத்தில் பஞ்சம் இருந்தபடியினாலும், மழை பெய்யாதபடியினாலும் சில நாட்களுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போனது. பின்னர் கர்த்தர் எலியாவை சீதோனுக்கு அடுத்த அதாவது தீரு- சீதோன் பட்டணங்களுக்கு இடையே காணப்பட்ட சாறிபாத் என்ற கடற்கரை ஊருக்கு அழைத்து வந்தார். (1 இராஜாக்கள் 16:31).
அங்கே எலியாவை பராமரிப்பதற்கு ஒரு விதவையை ஏற்பாடு பண்ணினார். அந்தப்பெண் கர்த்தரின் வார்த்தையை நம்புகிறவர். அவளுக்கு ஒரு மகன். எலியா அவளை அணுகி எனக்கு அப்பமும், தண்ணீரும் கொண்டு வா என்று சொன்னபோது அவள், நானும் என் குமாரனும் இருக்கிற ஒரு பிடி மாவிலே அடை செய்து சாப்பிட்டு செத்துப் போக தக்கதாக விறகு பொறுக்க வந்திருக்கிறேன் என்றாள். கர்த்தருடைய வார்த்தையை நம்புகிற பெண்ணாக அவள் இருந்தபடியால் மரணத்தின் பிடியிலிருந்து அவளை விடுவிக்க எலியாவை சாறிபாத் ஊருக்கு அனுப்பினார். அங்கு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இவை நடந்த பின்பு வியாதியில் விழுந்து அந்த மகன் உயிரிழந்தான். அப்பொழுது அந்தப் பெண், 'தேவனுடைய மனுஷனே, என் அக்கிரமத்தை நினைக்க பண்ணவும், என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்' என்று கேட்டாள்.
சாறிபாத் விதவையைப் போலவே எலியாவும் சந்தேகப்பட்டு பஞ்சகாலத்தில் வாழ வழிகாட்டி ஆசீர்வதித்த கர்த்தர், சாவை அனுமதித்து துக்கத்தை வருவித்து விட்டார் என சந்தேகப்பட்டு விட்டான். உடனே எலியா கர்த்தரை நோக்கி, 'நான் தங்கிஇருக்க இடம் கொடுத்த இந்த பெண்ணின் மகனை சாகப் பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தாரோ' என்று அந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வர விண்ணப்பம் பண்ணினான்.
அப்படியே கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார். அந்தப் பையன் பிழைத்தான். இரண்டாவது முறையாக மரண சங்கிலியிலிருந்து அந்த குடும்பம் விடுவிக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 17: 24).
இயேசுவோடு நித்திய வாழ்வை கொண்டாட
கர்த்தருடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அவர் மேல் நம்பிக்கையாய் இருந்து நம்முடைய அக்கிரமங்களை அவரிடம் அறிக்கையிடும் போது, அவர் மரணத்திலிருந்து ஜெயம் பெற நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுதான் உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாடுதலின் பங்கு.
ராஜாவாகிய யோசியா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளை சாப்பான் வாசிக்க கேட்டு, தன்னைத்தானே கர்த்தரிடத்தில் தாழ்த்தினார். இதனால் தீர்க்கதரிசியாகிய உல்தாள் மூலம் (2 இராஜாக்கள்22:20) அவனுக்கு கிடைத்த கர்த்தருடைய வார்த்தை, "நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்". அதேபோல யோசியா ராஜா கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னால் அதாவது, எருசலேம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்படுவதற்கு முன்னால் தன்னுடைய பிதாக்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டான் (2 இராஜாக்கள் 23:29,30). அதுபோல நாமும் இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு வரும் போது கர்த்தருடைய வருகையிலே கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (1 தெசலோனிகேயர் 4:15-18) நமக்கென்று கர்த்தர் ஆயத்தம் பண்ணி இருக்கிற ஸ்தலத்திலே (யோவான் 14:3) அவர் மறுபடியும் வந்து நம்மை சேர்த்துக்கொள்ள ஆயத்தப்படுவோம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். ஆதியில் இருந்த அன்பை விட்டாய் என்று எபேசு சபைக்கு சொன்னது போல, (வெளிப்படுத்தல் 2:4) நம்மைப் பார்த்து சொல்லப்பட்டு விடாமல் விழித்துக்கொள்வோம்.
கடைசி எக்காளம் தொனிக்கும்போது நாம், கர்த்தரோடு என்றென்றைக்கும் ஜீவிக்க கூடிய சரீரமாக்கப்படுவதற்கு, அதாவது மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டத்திலே நீதியுள்ளவர்களாய், விசுவாசத்தை காத்துக் கொள்பவர்களாய் (2 தீமோத்தேயு 4) நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்துவோம். பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம்.