வழிபாடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது

Published On 2022-08-02 05:21 GMT   |   Update On 2022-08-02 05:21 GMT
  • இன்று முதல் 12-ந்தேதி வரை அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது.
  • 13-ந்தேதி உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் களப பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கிய தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பன்னீர் மற்றும் பல வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து தங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயணரூ நடத்தினார்.

பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை 24-வது குரு மகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், ஆதீன கல்வி நிறுவனங்களின் தென் மண்டல மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், சுசீந்திரம் கிளை மட ஆய்வர் நாதன், பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து வலம் வரச் செய்தல், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு போன்றவை நடந்தது.

விழாவில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் 12-ந் தேதி வரை காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. களப பூஜை நிறைவடைந்த பிறகு 13-ந் தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News