காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசன ஏற்பாடுகள்
- நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்கள்.
- பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும், இடையூறும் ஏற்படக்கூடாது.
சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. அதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கோவில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் பங்கேற்றுப் பேசுகையில், ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும், இடையூறும் ஏற்படக்கூடாது. தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் மையங்கள், கவுண்ட்டர்கள், வி.ஐ.பி.களுக்கான வசதி ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.
கூட்டத்தில் கோவில் துணை நிர்வாக அதிகாரிகள் எஸ்.வி. கிருஷ்ணாரெட்டி, ரவீந்திரபாபு, வித்தியாசாகர்ரெட்டி, மாதவரெட்டி, ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.