கல்பாத்தி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 14-ந்தேதி முதல் தேரோட்டம் 3 நாட்கள் நடக்கிறது.
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இதேபோல் நடப்பாண்டில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது.
வருகிற 14-ந் தேதி முதல் தேரோட்டம், 15-ந் தேதி 2-வது தேரோட்டம், 16-ந் தேதி 3-வது தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் கடைசி நாளான 16-ந் தேதி 3 கோவில் தேர்களும் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் வந்து சேரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.