குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு பாதுகாப்பாக வைக்கப்பட்டது
- சிரசு திருவிழா முடிந்ததும் அம்மன் சிரசு கெங்கையம்மன் கோவிலில் மூலவர் அருகே வைக்கப்பட்டது.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரசை பயபக்தியுடன் வணங்கி சென்றனர்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், திங்கட்கிழமை அம்மன் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது. சிரசு திருவிழாவிற்காக அம்மன் சிரசு கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்ட பின் சிரசு ஊர்வலம் தொடங்கும்.
சிரசு ஊர்வலம் அன்று தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலுக்கு சிரசை அதிகாலை கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்திற்கு பின்னர் கெங்கையம்மன் சண்டாளச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டு அன்று இரவு வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன் பின் இரவே அம்மன் சிரசு தனியாக எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று சுண்ணாம்பு பேட்டையில் முகம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு சிரசு திருவிழா முடிந்ததும் அம்மன் சிரசு கெங்கையம்மன் கோவிலில் மூலவர் அருகே வைக்கப்பட்டது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரசை பயபக்தியுடன் வணங்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் சிரசு அங்கிருந்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக அறையில் மீண்டும் வைக்கப்பட்டது.