வழிபாடு

பக்தர்கள் மொட்டை அடித்துக் கொண்டபோது எடுத்த படம்.

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்

Published On 2022-10-08 05:45 GMT   |   Update On 2022-10-08 05:45 GMT
  • இந்த கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
  • விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை வழிபட்டு செல்வார்கள்.

அந்த வகையில் நடப்பாண்டு புரட்டாசி மாத முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேவநாதசாமி கோவிலுக்கு திரண்டு வந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடித்துக் கொண்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தேவநாதசாமியை தரிசனம் செய்தனர்.

முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மேலும் 3-ம் சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர இன்று 3-ம் வார சனிக்கிழமை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பகுதி மற்றும் சாலைகளில் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News