வழிபாடு

அதிகாரநந்தி, காமதேனு வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா

Published On 2023-02-21 06:22 GMT   |   Update On 2023-02-21 06:22 GMT
  • சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர்.
  • நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை அதிகாரநந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் அதிகார நந்தி வாகனத்தில் கங்கா பவானி சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தினர். வாகனத்துக்கு முன்னால் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள், செண்டைமேளம் இசைக்கப்பட்டது. வாகன ஊர்வலம் சன்னதி வீதியில் தொடங்கி நேரு வீதி, நகர வீதி வழியாக சென்று பஜார் வீதி, கோவில் வரை நடந்தது. நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு நகரி வீதியில் உள்ள கோவில் திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தனர்.

Tags:    

Similar News