'ஜெகன் மோகினி' அலங்காரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் உலா: இரவு கருடசேவை நடந்தது
- கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
- பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை பல்லக்கு உற்சவம் நடந்தது.
அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், 'ஜெகன்மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவருடன் திருச்சி வாகனத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பல்லக்கு முன் கஜராஜர் வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பஜனைகள் குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடினர். கேரள செண்டை மேளம் இசைக்கப்பட்டது.
முன்னதாக சீனிவாசமங்காபுரத்தில் நடந்த கருடசேவையில் எழுந்தருளிய உற்சவா் கல்யாணவெங்கடேஸ்வரருக்கு திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அந்த மாலைகள் திருப்பதி கோசாலை, தாடிதோப்பு, பெருமாள்பள்ளம் வழியாக சீனிவாசமங்காபுரத்தை அடைந்தன. அந்த மாலையில் ஒன்று மூலவருக்கும், மற்றொரு மாலை கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கும் அணிவிக்கப்பட்டன.
மாலை ஊர்வலத்தில் கோவில் சிறப்புநிலை துணை அதிகாரி வரலட்சுமி, கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கருடசேவை நடந்தது. உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருடசேவையில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.