வழிபாடு

அய்யா வைகுண்டசாமி சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நாளை நடக்கிறது

Published On 2022-08-25 05:51 GMT   |   Update On 2022-08-25 05:51 GMT
  • அய்யா வைகுண்டசாமி குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
  • 29-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு அய்யா வைகுண்டசாமி சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பதி மற்றும் நான்கு ரத வீதியிலும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

பக்தர்கள் பூ, பழம், பன்னீர், பால் போன்றவற்றை சுருளாக வைத்து வழிபட்டனர். 7-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் எழுந்தருளி வாகன பவனியும் நடைபெறுகிறது.

8-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்து முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கலிவேட்டையாடும் பணிவிடையை குரு பாலஜனாதிபதி நிகழ்த்துகிறார். இந்தநிகழ்ச்சிக்கு குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் கிருஷ்ண நாமமணி, ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனாவைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா வைகுண்டசாமி குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் விழாவில் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

11-ம் திருவிழாவன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பு, இரவு வாகன பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றுவருகிறது. மேலும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News