வழிபாடு

மீனாட்சி கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் விறகு விற்ற திருக்கோலத்தில் சுந்தரேசுவரர்

Published On 2022-09-08 05:28 GMT   |   Update On 2022-09-08 05:28 GMT
  • சுந்தரேசுவரர் விறகு விற்ற கோலத்தில் காட்சி அளித்தார்.
  • விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 10-ம் நாளான நேற்று மாலை விறகு விற்ற திருவிளையாடல் லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர் விறகு விற்ற கோலத்தில் காட்சி அளித்தார். அதை தொடர்ந்து விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.

புராண வரலாறு வருமாறு: வரகுன பாண்டியன் ஆட்சி காலத்தில் ஏமநாதன் என்னும் புலவர் பாண்டியநாட்டிற்கு வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவர் அரசன் முன் யாழ் மீட்டினார். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினார். ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா என ஆணவத்துடன் சவால் விட்டார். அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய மன்னன் அரசவை ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் ஏமநாதனை வெல்லும் வழியறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார். இறைவனும் முதியவர் உருவம் கொண்டு விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்து கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாழினை வாசித்து கொண்டிடே பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார் என்று வினவ, அவரும் பாணபத்திரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் என்று கூறினார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான் என்று வரலாறு கூறுகிறது.

Tags:    

Similar News