வழிபாடு

அங்காளம்மன் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டம்

Published On 2022-06-10 05:50 GMT   |   Update On 2022-06-10 05:50 GMT
  • அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
  • அங்காளம்மன் கோவிலில் முதல் முறையாக தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது

தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலில் தங்கத்தேர் வடிவமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 கிலோ 987 கிராம் எடையில் தங்கத்தேர் வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது, இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளைதாரர்கள் உபயமாக தங்கத்தேரை கோவில் பரம்பரை அறங்காவலர் மகிபாலன் முன்னிலையில் கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தங்கத்தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி தங்கத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா கணபதி வழிபாடு, பாலிகை பூஜை, கங்கணம் கட்டுதல், முதல் கால பூஜை, தங்கத்தேர் உற்சவர் கும்பாபிஷேகம், புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை போன்றவை நடந்தன. பின்னர் காலை 10.15 மணி அளவில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, சுந்தரராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கந்தசாமி, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் மங்கையர்கரசி, துணை ஆணையாளர் (சரிபார்ப்பு அலுவலர்) சபர்மதி, ஆய்வாளர் கார்த்திகா, செயல் அலுவலர் மாதேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் மகிபாலன், கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை செயலாளர் ஈரோடு முத்துசாமி, பொருளாளர் தியாகராஜன், தலைவர் மோகனசுந்தரம் உபதலைவர், மனோகர செல்வம், அசோக், பாபு மற்றும் பரம்பரை பூசாரிகள், அறக்கட்டளைதாரர்கள், கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கோஷத்துடன் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, அங்காளம்மன் கோவிலில் முதல் முறையாக தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News