சேவூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்
- 6-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.
- மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல் பெற்றதும் நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீவாலிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய, ஆன்மிக தலமான சேவூரில், தென்கரையில் பழங்கால தெய்வமான அங்காளம்மன் கோவில் உள்ளது. சேவூர் அங்காளம்மன் கோவில் குறித்து அதன் பரம்பரை பூசாரி பொ.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-
சேவூரின் தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் சுமார் 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகர், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது சிறப்பு வாய்ந்ததாகும்.
அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள். இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, ஜூலை 6-ந் தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 6-ந்தேதி கோவில் குடமுழுக்கு திருப்பணி செய்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவாசனை, கலச ஆவாஹனம், சுதர்சனஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, சாற்றுமுறை, மஹாதீபாராதனை நடைபெற்று பாலாயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குலதெய்வத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.