அம்பையில் பங்குனி திருவிழா: சிவபெருமான் திருமணக்கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளித்தார்
- இன்று தேரோட்டம் நடக்கிறது.
- நாளை தீர்த்தவாரி நடக்கிறது.
நெல்லை மாவட்டம் அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
8-ம் நாளான நேற்று காலையில் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
ஆண் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பெண் பக்தர்கள் கும்பிடுநமஸ்காரம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பக்தர்கள் 'பொதிகாசலம் தட்சிணாமூர்த்தி' என்று பக்தி கோஷம் முழங்க ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அன்னம் சொரிதல் நிகழ்ச்சி, சிறப்பு தீதனை நடைபெற்றது. இரவில் அம்பை பூக்கடை பஜாரில் சிவபெருமான் நடராஜர் கோலத்தில் சிவகாமி அம்பாளுடன் திருமணக்கோலத்தில் எழுந்தருளி அகஸ்தியருக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.