வழிபாடு
சிதம்பரம் நடராஜருக்கு மகா ருத்ர அபிஷேகம்

சித்திரை மாதத்தையொட்டி சிதம்பரம் நடராஜருக்கு மகா ருத்ர அபிஷேகம்

Published On 2022-04-25 12:14 IST   |   Update On 2022-04-25 12:14:00 IST
சித்திரை மாதத்தையொட்டி சிதம்பரம் நடராஜருக்கு மகா ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி ஆகிய 6 மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சித்திரை மாத மகா ருத்ர அபிஷேகம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு கனக சபையில் வைத்து விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக மகா அபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை, கால சந்தியில் விசேஷ ரகசிய பூஜை, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்திக்கு லட்சார்ச்சனை, கடஸ்தாபனம், மஹா ருத்ர ஜபம், மஹா தீபாராதனை ஆகியவை நடந்தது.

பின்னர் மதியம் 2.30 மணிக்கு, கிழக்கு கோபுரம் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு மகா ருத்ர யாகத்தை தீட்சிதா்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

தொடா்ந்து ஹோமம், மஹா ருத்ர ஹோமம், வசோதாரா ஹோமம், மஹா ருத்ர மஹாபூர்ணாகுதி, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, தச தானங்கள், பஞ்ச தானங்கள், கடயாத்ராதானம் ஆகியவை நடந்து முடிந்த உடன், இரவு 7 மணிக்கு மேல் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மகா ருத்ர அபிஷேகம் இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

Similar News