வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

Published On 2022-04-23 13:30 IST   |   Update On 2022-04-23 13:30:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மன் உற்சவர் மண்டபத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருளி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இரவு 7.55 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகள் ஒலிக்க அம்மன் தெப்பக் குளத்தில் உள்ள மைய மண்டபத்தை  இரண்டு முறை வலம் வந்து அதன் பின்னர் தெப்பத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்றாவது முறையாக மைய மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தெப்ப உற்சவத்தை காண்பதற்காக தெப்பத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

மேலும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் வழியே வாகனங்களில் சென்ற பயணிகளும் அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து 8.45 மணிக்கு அம்மன் தெப்பத்திலிருந்து இறக்கப்பட்டு கேடயத்தில் வீதி உலா வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், வாசுதேவன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Similar News