வழிபாடு
கும்பகோணத்தில் ஏழூர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கியது

கும்பகோணத்தில் ஏழூர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கியது

Published On 2022-04-20 09:33 IST   |   Update On 2022-04-20 09:33:00 IST
கும்பகோணத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏழூர் பல்லக்கு ஊர்வலம் புறப்பாடு நடப்பது வழக்கம்.
கும்பகோணத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஏழூர் பல்லக்கு ஊர்வலம் புறப்பாடு நடப்பது வழக்கம். இதில் ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை மற்றும் விநாயகர் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை), தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று மீண்டும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை வந்தடைவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி மகாமக குளத்தில் மங்களாம்பிகை- ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி நடந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏழூர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கி நேற்று காலை திருக்கலயநல்லூர் எனும் சாக்கோட்டையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அமிர்தகலசநாதர் கோவிலையும், மதியம் தாராசுரம் காமாட்சி அம்மன் சமேத ஆவுடையநாதர் கோவிலையும் வந்தடைந்தது.

தொடர்ந்து நேற்று மாலை திருவலஞ்சுழி பிரகன்நாயகி சமேத கபர்தீஸ்வரர் கோவிலை வந்தடைந்த பல்லக்கு ஊர்வலம் இரவு அங்கிருந்து புறப்பட்டு சுவாமிமலை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. நள்ளிரவு, கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசாமி கோவிலுக்கு வந்த பல்லக்கு ஊர்வலம், இன்று (புதன்கிழமை) அதிகாலை மேலக்காவேரி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலுக்கு செல்கிறது.

அதைத்தொடர்ந்து மீண்டும் ஆதிகும்பேஸ்வரர் சாமி கோவிலுக்கு ஊர்வலம் வருகிறது. இதை முன்னிட்டு இன்று இரவு ஆதிகும்பேஸ்வரர் வடக்கு வீதியில் சாமி மற்றும் அம்பாளுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Similar News