வழிபாடு
ராமர்

ராம நாமத்தின் மகிமை

Published On 2022-04-19 12:31 IST   |   Update On 2022-04-19 12:31:00 IST
ராம நாமத்தை தினமும் அல்லது அபயம் ஏற்படும போது சொல்வதால் என்ன கிடைக்கும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
மன்னன் ஒருவர் தன்னுடைய மந்திரியுடன், வேட்டையாடுவதற்காக அடர்த்தியான காட்டுப் பகுதிக்குச் சென்றார். அந்தக் காடு அவர்களுக்கு புதியது என்பதால் இருவரும் வழி தவறி விட்டார்கள். அடர்ந்த காடு என்பதால் எப்படி வெளியேறுவது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதையைத் தேடி அலைந்து அலைந்தே, இவருக்கும் பசி மயக்கம் ஏற்பட்டு விட்டது. வழியை அறிய முடியாத இயலாமையும், பசியால் ஏற்பட்ட மயக்கமும், மன்னனை கோபத்திற்கு உள்ளாக்கியது.

ஆனால் மந்திரியோ அடர்ந்த வனத்தின் அழகில் தன்னுடைய மனதை பறிகொடுத்து, இயற்கையை ரசித்தபடியே மன்னனோடு நடைபோட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இறைவனை தியானிக்க வேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. அதன்படியே அங்கு தென்பட்ட ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். தியானத்தின் ஊடே, ‘ராம ராம’ என்று ராம நாமத்தையும் ஜெபிக்கத் தொடங்கிவிட்டார்.

இதைக் கண்ட மன்னன், “மந்திரியாரே.. பசியால் உயிர்போகிறது. ஏதாவது உணவை சேகரித்து வரலாம்தானே. சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும். பசியாறவும் ஏதாவது கிடைக்கும்” என்று சொன்னார்.

அதற்கு மந்திரியோ, “மன்னா.. நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் சிறிது தூரம் சென்றால், ஏதாவது கிடைக்கும்தான். என்னுடைய வயிறும் உணவைத்தான் நாடுகிறது. ஆனால் என்னுடைய மனமோ, அமைதியையும், ராம நாமத்தையும், இறைவனையும் நாடுகிறது. நான் என்ன செய்ய முடியும். ஆகையால் நான் இப்போது உணவைத் தேடிச் செல்லும் நிலையில் இல்லை” என்றார்.

சினம் கொண்ட மன்னன், தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட, அங்கு விரைந்து சென்றார். அந்த வீட்டினரிடம் தான் யார் என்பதைச் சொல்லி, ‘பசியாற ஏதாவது கிடைக்குமா?’ என்று கேட்டார். அவர் மன்னன் என்பதை அறிந்ததும், அவரை வரவேற்று உபசரித்த அந்த வீட்டினர், அவருக்கு தங்கள் வீட்டில் இருக்கும் உணவை அளித்தனர். அங்கிருந்து புறப்படும் முன்பாக, மனம் கேளாமல் தன்னுடைய மந்திரிக்கும் சிறிது உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பினார், மன்னன்.

மந்திரி இருக்கும் இடத்தை அடைந்த மன்னன், மரத்தடியில் அமர்ந்து ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டித்த மந்திரியை நெருங்கி, “மந்திரியாரே.. இந்தாருங்கள் உணவு. இப்போதாவது தெரிந்ததா.. நான் எடுத்த சரியான முடிவால்தான் இன்று நமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் ராம நாமத்தால் எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறியபடி, மந்திரியை ஏளனத்தோடு பார்த்தார்.

உணவைப் பெற்றுக்கொண்ட மந்திரி, “மன்னா.. உணவிற்காக மாபெரும் சக்கரவர்த்தியான தாங்கள், இன்று ஒரு சாதாரண பிரஜையிடம் யாசகம் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் என்னைப் பாருங்கள்... நான் உச்சரித்த ராம நாமத்தின் வலிமையால், ஒரு மாபெரும் சக்கரவர்த்தியான உங்களின் கையால் எனக்கு உணவு கிடைக்கும்படி இறைவன் செய்திருக்கிறான்” என்றார்.

அதைக் கேட்டு வாயடைத்துப் போனார் மன்னன்.

Similar News