வழிபாடு
சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில்

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-03-03 13:07 IST   |   Update On 2022-03-03 13:07:00 IST
பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள்.
சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி வந்தனர்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா வரும் மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குண்டம் விழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கோபி செட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் நடைபெற உள்ளது.

இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி 7-ந் தேதி இரவு வரம் கேட்டல் மற்றும் பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்குகிறது.

அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி அம்மன் சப்பரம் திருவீதிஉலாவும், திருகம்பம் சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து 21-ந் தேதி இரவு தீக்குண்டம் வார்ப்பு விழாவும், 22-ந் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கர்நாடக, தமிழக பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு விழா நடப்பதால் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதையொட்டி அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Similar News