வழிபாடு
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தண்ணீருடன் சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம், சங்கு வைத்து பூஜை

Published On 2022-01-31 10:30 IST   |   Update On 2022-01-31 10:30:00 IST
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் தமிழகத்தில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு உத்தரவு வந்த பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் தோன்றும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்யப்படும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி முதல் நிறைபடி நெல் வைத்து பூைஜ செய்யப்பட்டு வந்தது.

தற்போது கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது பற்றி பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:-

சிவன்மலை ஆண்டவன் உத்தரவான பொருட்கள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்று விடும். தற்போது கண்ணாடி பேழையில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் வைத்து பூஜை செய்யப்படுவதால் ஏதோ பெரும் ஆபத்திலிருந்து சிவன்மலை சுப்பிரமணியசாமி அனைவரையும் காப்பாற்றுவார் என இதன் மூலம் உணர்த்துகிறது. எனினும் இதனுடைய நன்மைகள், தீமைகள் வரும் காலங்களில் தெரியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News