வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றதை படத்தில் காணலாம்.

3 நாட்களுக்கு பிறகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-01-25 03:01 GMT   |   Update On 2022-01-25 03:01 GMT
உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பொது மற்றும் கட்டண வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 21-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதனால் பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து விளக்கேற்றி வழிபாடும் செய்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களும் மூடப்பட்டதால் கிரிவலம் சென்ற பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் இருந்தது.

கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பொது மற்றும் கட்டண வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்று கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்தனர்.

வெளியூரில் இருந்து வருகை தந்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News