வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்வேட்டை உற்சவம் நடந்த காட்சி.

திருப்பதி கோவில் வளாகத்தில் பார்வேட்டை உற்சவம்: பஞ்ச ஆயுதங்களுடன் ஏழுமலையான் காட்சி

Published On 2022-01-17 06:40 GMT   |   Update On 2022-01-17 09:52 GMT
கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதர் ஈட்டியை ஏந்தியபடி சாமியுடன் செயற்கை வாகனத்தை நோக்கி 3 முறை ஓடிச்சென்று ஈட்டியை எறிந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த அடுத்த நாளும் ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்திற்கு செல்வார்.

அதன்படி நேற்று பார்வேட்டை உற்சவம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பார்வேட்டை மண்டபத்திற்கு ஏழுமலையான் செல்லவில்லை.

கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் சிறிய செயற்கை வாகனம் அமைக்கப்பட்டது. அங்கு ஏழுமலையான் சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களுடனும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்தருளினர்.

பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னமாச்சார்யாவின் சங்கீத கீர்த்தனை நடைபெற்றது. இதையடுத்து வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதர் ஈட்டியை ஏந்தியபடி சாமியுடன் செயற்கை வாகனத்தை நோக்கி 3 முறை ஓடிச்சென்று ஈட்டியை எறிந்தார். நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று திருப்பதியில் 35,642 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,178 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News