ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

Published On 2021-07-10 11:57 IST   |   Update On 2021-07-10 11:57:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் முடிக்காணிக்கை செய்தும், கரும்பு தொட்டில்களில் குழந்தையை சுமந்தும் கோவிலை வலம் வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு அரசு தடை விதித்து இருந்தது. தற்போது, தளர்வு காரணமாக கோவில்களில் சாமியை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அமாவாசையான நேற்று சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் முடிக்காணிக்கை செய்தும், கரும்பு தொட்டில்களில் குழந்தையை சுமந்தும் கோவிலை வலம் வந்தனர். மேலும், விளக்கு ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு கிருமி நாசினி தெளித்தும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னர், முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்ல கோவில் பணியாளர்கள் அனுமதித்தனர். மேலும் திருச்சியிலிருந்து சமயபுரம் நோக்கி வந்த அனைத்து பஸ்களும், புதிய பஸ் நிலையம் வரை மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர்.

Similar News