ஆன்மிகம்
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்.

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-07-09 10:41 IST   |   Update On 2021-07-09 10:41:00 IST
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மலைப்பகுதியில் அமைந்ததால், திருமலை நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் யோகேஸ் சிங், களக்காடு துணை இயக்குனர் அன்பு உத்தரவின்பேரில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ அனுமதி கிடையாது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News