ஆன்மிகம்
ரிஷப வாகனத்தில் பிச்சாண்டேஸ்வரர் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளிய காட்சி.

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு- நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-07-08 09:58 IST   |   Update On 2021-07-08 09:58:00 IST
சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சவுந்தர்யபார்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டு கோவில் பிரகாரத்தை வலம்வந்து மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

இதேபோல் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து ரிஷப வாகனத்தில் பிரம்மபுரீஸ்வரர் பிரம்ம சம்பத்கவுரி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், பனமங்கலம் வாரணபுரீஸ்வரர் கோவில், உத்தமர்சீலி அருகே திருப்பால்துறை ஆதிமூலேஸ்வரர், சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், ஏகாம்பரநாதர் கோவில், உப்பிலியபுரம் அருகே ரெட்டியாப்பட்டியில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில், கொப்பம்பட்டி ஸ்ரீசப்தரீஸ்வரர் கோவில், தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் காசிவிஸ்வநாதர் கோவில், முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், தா.பேட்டை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.

Similar News