ஆன்மிகம்
அம்மனை தரிசிக்க வந்து தெற்கு சித்திரை வீதியில் திரண்டு இருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

மீனாட்சி அம்மனை தரிசிக்க திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம்

Published On 2021-07-06 10:46 IST   |   Update On 2021-07-06 10:46:00 IST
மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் கிழக்கு நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இன்னும் அதன் பாதிப்புகள் குறைய வில்லை. நாள்தோறும் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மே மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட் டன.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அடுத்தடுத்து அறிவித்து வந்தது. அதன்படி ஊரடங்கு விதிகள் பெரும்பாலானவை நீக்கப்பட்டு நேற்று முதல் கோவில்கள், தேவாலங்கள், பள்ளிவாசல்கள் வழிபாடுகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி கடந்த 2 நாட்களாக கோவில்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று (5-ந்தேதி) முக்கிய கோவில்களின் நடை அதிகாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் கிழக்கு நுழைவு வாயிலில் காத்திருந்தனர். காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அதன் பிறகு பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் நுழைவு வாயிலில் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவி மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்டனர். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.

Similar News