ஆன்மிகம்
மெய்கண்ட தேவர்

சந்தான குரவர்களில் முதன்மையானவரான மெய்கண்ட தேவர்

Published On 2021-07-02 11:43 IST   |   Update On 2021-07-02 11:43:00 IST
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார் சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்ட மெய்கண்டார்.
சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்டவர், மெய்கண்டார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார். இவர் 2 வயதாக இருக்கும் போது, திருவெண்ணெய்நல்லூரில் இருந்த தனது உறவினர் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அகத்தியரைக் காணும் பொருட்டு, பொதிகை மலை நோக்கி ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார், அகச் சந்தான குரவர்களில் ஒருவரான பரஞ்சோதி முனிவர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். சந்தான குரவர்களில், முதன்மையானவராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார்.

திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமை சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.

Similar News