ஆன்மிகம்
திருமூலர்

கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை?- திருமூலர் தரும் விளக்கம்

Published On 2021-06-05 12:25 IST   |   Update On 2021-06-05 12:25:00 IST
பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது, பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான், ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை.
இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர்.

ஒரே மண்ணிலிருந்து பல பாண்டங்கள் செய்தாற் போன்று கடவுள் எனும் ஒரே மூலம் பல மனிதப் பிறவிகளாய்ப் பிறக்கின்றன. பாண்டங்கள் உடைந்தால் மீண்டும் மண்ணாகிப் பூமியில் இரண்டறக் கலப்பது போல மனிதர்களின் உடல்களும் கலக்கின்றன. (Law of Conservation of Mass) உயிர்கள் இறைவனுடன் கலக்கின்றன.(Law of Conservation of Energy) எங்கிருந்து வந்தனவோ அங்கேயே திரும்பப் போகும் பாண்டங்கள் போலவேதான் நாமும்.

பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது, பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான், ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை.

கண்ணானது யாவற்றையும் பார்க்கிறது என்றாலும் அது என்றுமே தன்னைப் பார்த்ததில்லை. பார்க்கவும் இயலாது. எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறான் எனினும் யாருமே தத்தமக்குள் இருக்கும் கடவுளைக் காண இயலாது. கண் இருப்பதை உணர முடிந்தது போல் உணர வேண்டுமானால் செய்யலாம்.
இப்படிக் கடவுள் இருந்தவாறு தன்னை மறைப்பது அவனது நான்கு தொழில்களில் ஒன்றாகும். (படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல்)

இவ்வளவு செய்திகளையும் தன்னில் அடக்கிய அந்த அருமையான திருமந்திரப் பாடல் இதோ:

மண்ஒன்று தான்பல நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே

Similar News