ஆன்மிகம்
பூஜை

கிழக்குத் திசை நோக்கி பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?

Published On 2021-06-04 10:36 IST   |   Update On 2021-06-04 10:36:00 IST
கிழக்குத் திசையை நோக்கி அல்லது வடக்குத் திசையை நோக்கித் தியானம், பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

இவற்றுக்குச் சாஸ்திரப் பிரமாணங்கள் உண்டு. மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்குத் திசையை நோக்கித்தான் இருந்தது. அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. ரிஷிகள் பலர் வடக்குத் திசையை நோக்கித் தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கிறோம். இமயமலை வடக்கில் உள்ளது.

எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கும் திசையை நோக்கித் தவம் செய்தால், அவர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்றும் கொள்ளலாம். சூரிய பகவான் நாள்தோறும் கண்கண்ட தெய்வமாகக் கிழக்கில் உதித்து நம்மை தட்டி எழுப்பி, நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் ஒளி தந்து வழி காட்டுகிறார். ஆதலால் கிழக்குத் திசையை நோக்கிய வழிபாடு சிறந்தது என்று ஆயிற்று. இதற்குச் சாஸ்திரப் பிரமாணமும் உண்டு. நடுப்பகலில் வடக்கும் தியானத்திற்கு உரியது.

மாலையில் மேற்கும் உரியது. தெற்குத்திக்கில் யமலோகம் என்று சாஸ்திரம் கூறியதால், அது சுப காரியங்களுக்கும், தெய்வ வழி பாட்டுக்கும் உரியதாகக் கொள்ளப்படவில்லை. இந்த நடை முறைகளெல்லாம் சாதாரண மக்களுக்குதான், ஞானிகளுக்கு இல்லை. திசை பற்றிய இந்த நியமம் தெய்வத்திற்கும் இல்லை. மயிலாப்பூரில் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி இருக்கிறாள். தட்சிணாமூர்த்தி எல்லா இடங்களிலும் தெற்கு நோக்கித்தான் இருக்கிறார். ராமகிருஷ்ணர் வழிபட்ட பவதாரிணியும் தெற்கு நோக்கியே இருக்கிறாள்.

Similar News