ஆன்மிகம்
கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட காட்சி.

மண்டைக்காடு கோவிலில் அம்மனுக்கு இன்று காலை தீபாராதனை வழக்கமான வழிபாடுகள் நடந்தது

Published On 2021-06-03 13:24 IST   |   Update On 2021-06-03 13:24:00 IST
மண்டைக்காடு கோவிலில் இன்று காலையில் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகள் செய்யப்பட்டது. மதியம், மாலை, இரவும் வழக்கமான பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமும் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலையில் பூஜைகள் நடந்தது. பின்னர் சிறிது நேரத்தில் கோவில் கருவறையில் இருந்து புகை மண்டலம் வந்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்ததில் கருவறையின் மேற்கூரை சேதமடைந்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளும், மண்டைக்காடு போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விளக்கில் ஏற்றப்பட்ட தீ காற்றின் வேகம் காரணமாக அங்கிருந்த துணியில் பிடித்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீ விபத்தை தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பக்தர்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கோவிலை சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து பரிகார பூஜைகள் நடந்தது.

கோவில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜைகளை நடத்தினர். பின்னர் புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி,வாஸ்து பலி, பரிகார பூஜை,அஸ்தர பூஜை ஆகிய பூஜைகள் நடத்தி அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கமான மாலை 6.30 சாயரட்சை தீபாராதனை,இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜைகள் நடந்தது.பரிகார பூஜையில் திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலையிலும் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டது. 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து வழக்கமான வழிபாடுகளும் செய்யப்பட்டது. மதியம், மாலை, இரவும் வழக்கமான பூஜைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று ஆய்வு நடத்தியபோது மறு சீரமைப்பு பணி விரைவில் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார்.இந்த நிலையில் தீ விபத்தில் சேதமடைந்த மேற்கூரையை சீரமைப்பது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

Similar News