ஆன்மிகம்
நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

Published On 2021-05-25 12:45 IST   |   Update On 2021-05-25 12:45:00 IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வசந்த உற்சவ விழாவையொட்டி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

இந்த உற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் நான்கு புறமும் அகழிபோல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பிய அழகிய மண்டபத்தின் நடுவே உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை வேளைகளில் எழுந்தருள்வார்.

விழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றார். அங்கு சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Similar News