ஆன்மிகம்
பீமனின் ஆணவம் அழித்த அனுமன்

பீமனின் ஆணவம் அழித்த அனுமன்

Published On 2021-05-21 13:33 IST   |   Update On 2021-05-21 13:33:00 IST
அனுமன் பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான்.
ஒரு முறை பாண்டவர்களின் மனைவியான திரவுபதிக்கு, ‘சவுகந்திகா’ என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று கிடைத்தது. அந்த மலரின் வாசனை, அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள். அவளது ஆசையை நிறைவேற்றுவதற்காக, அந்த மலரைத் தேடி பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து, அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த அனுமனை தள்ளிப் படுக்குமாறு கூறினான். அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.

அனுமன் பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. பீமன் பிரமித்தான். தான் ஆணவத்தோடு செய்த செயலை நினைத்து தலைகுனிந்தான்.

அப்போது “பீமா! நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்” என்று அனுமன் கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பீமன் அவரை பணிந்து, சவுகந்திகா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்.

Similar News