ஆன்மிகம்
சிவன்

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம்

Published On 2021-05-20 14:36 IST   |   Update On 2021-05-20 14:36:00 IST
சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன.
சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஐந்து வகையான முக்கிய பிரதோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஏகாட்சர பிரதோஷம்

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

பிரம்மப் பிரதோஷம்

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம், தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

அர்த்தநாரி பிரதோஷம்

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

திரிகரண பிரதோஷம்

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால், அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

அட்சரப் பிரதோஷம்

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால், அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள், `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

Similar News