ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி மாதப்பிறப்பையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்.
நாளை சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடர்ந்து 19-ந் தேதி வரை 5 நாட்களுக்கு பூஜைகள் நடைபெறும். கொரோனா பிரச்சினை காரணமாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கோவில் பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தந்திரிகள் மற்றும் மேல் சாந்திகளே நடத்துவார்கள். மேலும் கோவிலில் நடைபெறும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.