ஆன்மிகம்
கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் விழா

கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் விழாவை நடத்த உத்தரவிட முடியாது: மதுரை ஐகோர்ட்டு

Published On 2021-04-20 08:28 IST   |   Update On 2021-04-20 08:28:00 IST
கொரோனா பரவல் மிகத்தீவிரமாக உள்ளதால் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவை நடத்த உத்தரவிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.
மதுரை :

மதுரையை சேர்ந்த அருண் போத்திராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளாக தொன்றுதொட்டு நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் இந்த விழாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான கள்ளழகர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த திருவிழா இந்த ஆண்டு நடந்து விடாதா? என அத்தனை பக்தர்கள் மனமும் ஏங்குகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவை போதிய பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில் இது எவ்வாறு சாத்தியம்? வைகை ஆற்றில் தண்ணீரே இல்லை. வெறும் குப்பைகளே நிறைந்துள்ளன” என்றனர்.

பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “பக்தர்களே கலந்து கொள்ளாமல் வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை நடத்தி, அதை ஊடகங்களில் ஒளிபரப்ப உத்தரவிட வேண்டும்” என கோரினார்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. கொரோனா பரவல் மிகத்தீவிரமாக இருந்து வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம்” என கருத்து தெரிவித்தனர். முடிவில், “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாைவ நடத்துமாறு உத்தரவிட இயலாது” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News