ஆன்மிகம்
அகஸ்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

அம்பையில் பங்குனி திருவிழா: அகஸ்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

Published On 2021-04-13 09:32 IST   |   Update On 2021-04-13 09:32:00 IST
அகஸ்தியருக்கு இறைவன் திருமண காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் குறைவான பக்தர்கள் பங்கேற்புடன் விழா எளிமையாக நடத்தப்படுகிறது.
அம்பை காசிநாத சுவாமி கோவில், அகஸ்தீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கோவிலில் குறைவான பக்தர்கள் பங்கேற்புடன் விழா எளிமையாக நடத்தப்படுகிறது.

8-ம் திருநாளான நேற்று அகஸ்தியருக்கு இறைவன் திருமண காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து அகஸ்தியர் மற்றும் உலோப முத்திரை அம்பாள் அம்பை அம்மையப்பர் கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு சிவபெருமான் நடராஜர் கோலத்தில் அம்பாளுடன் எழுந்தருளி, கோவில் வளாகத்திலேயே அகஸ்தியருக்கு திருமண காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கோவில் நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணவேணி, முருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் வாசுதேவ ராஜா, பண்ணை கண்ணன், அகஸ்தீசுவரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி, சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகன் சாமிநாதன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தீர்த்தவாரி நிகழ்ச்சியும் கோவில் பணியாளர்களை கொண்டே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News