ஆன்மிகம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2021-02-25 08:30 GMT   |   Update On 2021-02-25 08:30 GMT
மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம் மகாமககுளத்தில் ஆண்டு தோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமகமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 5.30 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

விழாவில் இன்று (வியாழக்கிழமை) அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர் வெள்ளிவாகனத்தில் வீதிஉலா புறப்பட்டு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதேபோல் மாசிமக விழாவை முன்னிட்டு காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News