ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

Published On 2021-02-25 04:07 GMT   |   Update On 2021-02-25 04:07 GMT
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ராமாயண காலத்தில் தொடர்புடைய தலமாக விளங்குகிறது.

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வந்தபோது அவருக்குத் தாகம் ஏற்படவே இம்மலையில் நின்று முருகப்பெருமானை நினைத்து வேண்டவே முருகப்பெருமான் தனது வேலால் இம்மலையில் சுனையை ஏற்படுத்தி அனுமனுக்கு நீர் வழங்கியதாக ஐதீகம் உள்ளது.

அந்த வகையில் அனுமனுக்கு தாகம் தணித்த இடமாக அனுவாவி கோவில் விளங்குகிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது.

இதையொட்டி கடந்த மாதம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள பாத விநாயகர், கன்னி விநாயகர், அருணாச்சலேஸ்வரர் அனுவாவி ஆஞ்சநேயர், நவகிரகங்கள், இடும்பன் சுவாமி, சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சன்னதிகள், கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் மற்றும் அடிவாரத்திலிருந்து மலை கோவில் வரை உள்ள படிக்கட்டுகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் முடிவடைந்தது.

இதனைதொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் மலைக் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் தன பூஜை, மாலை 5 மணிக்கு முதல் கால வழிபாடு விநாயகர் வழிபாடு, தீபாராதனை இரவு 8 மணிக்கு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, திருமுறை பாராயணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் அன்னதானம் நடக்கிறது.

பகல் ஒரு மணிக்கு தச தரிசனம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு முருகன், வள்ளி தெய்வயானை திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
Tags:    

Similar News