ஆன்மிகம்
திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறப்பு

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: தாயாரை வழிபட்ட பக்தர்கள்

Published On 2021-02-09 12:48 IST   |   Update On 2021-02-09 12:48:00 IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலில் எழுந்தருளினார்.
திருச்சி:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு இவ்விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. 

நேற்று முன்தினம் வரை மூலஸ்தானத்தில் தாயாருக்கு திருவாதாரனம், திருமொழி சேவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவாய் மொழி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு பரமபதவாசலில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து வழிநடை உபயங்கள் கண்டருளி ஆழ்வார், ஆச்சாரியார் மரியாதையாகி திருவாய்மொழி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். 

அப்போது அங்கு திரளாக நின்று கொண்டிருந்த பக்தர்கள் தாயாரை வழிபட்டனர். இரவு 10 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று முதல் 10-ந்தேதி வரையும், ராப்பத்து உற்சவத்தின் நான்காம் திருநாளான 11-ந்தேதியும் பரமபதவாசல் மாலை 5.30 மணிக்கு திறக்கும். ஐந்தாம் திருநாளான 12-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு பரமபதவாசல் திறந்து இருக்கும். 13-ந்தேதி இயற்பா சாற்று முறையுடன் விழா நிறைவடைகிறது.

Similar News