ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2021-01-02 12:35 IST   |   Update On 2021-01-02 12:35:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாண்டை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டாடினர். மேலும் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

இரவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்று தேவையின்றி மோட்டார் சைக்கிளில் வலம் வருபவர்களை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் நேற்று அதிகாலையில் பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீராடி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் வெளி மாநிலம், பிற மாவட்டங்களிலிருந்தும் அதிக எண்ணி்க்கையிலான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். கோவிலில் பக்தர்களின் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக முகக்கவசம் அணியாமல் வந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். கோவிலில் பக்தர்கள் எந்தவித சிரமமின்றி வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரம் செய்யப்பட்டது. மேலும் சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.

அதுமட்டுமின்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News