ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

26-ந்தேதி சூரிய கிரகணம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைப்பு

Published On 2019-12-04 10:14 IST   |   Update On 2019-12-04 10:14:00 IST
வருகிற 26-ந்தேதி சூரிய கிரகணம் ஆகும். அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை 5 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகளவு உள்ளது.

அவர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதி அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

பகவதி அம்மன் கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம் ஆனால் தற்போது அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

அதேபோல் மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் கோவில் நடை இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். ஆனால் பக்தர்கள் வசதிக்காக தற்போது இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

இந்த நிலையில் 26-ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அன்று காலை 7.15 மணிக்கு ஆரம்பமாகும் சூரிய கிரகணம் பகல் 11.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இதையொட்டி சூரிய கிரகணத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்படும். விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும். அப்போது மூலவர் பகவதி அம்மன் சிலை தர்ப்பை புல், பட்டாடையால் மூடப்பட்டிருக்கும்.

சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு பகல் 11.45 மணிக்கு மூலஸ்தானம் நடை திறக்கப்படும். அம்மன் சிலை மீது உள்ள தர்ப்பைபுல், பட்டாடை அகற்றப்பட்டு பரிகார பூஜை நடத்தப்படும்.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். 5 மணி நேரம் நடை அடைப்புக்கு பிறகு பகல் 12 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலின் வடக்கு பிரதான நுழைவு வாயில் திறக்கப்படும். இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தெரிவித்தார்.

Similar News