ஆன்மிகம்
பவானி கூடுதுறையில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்

Published On 2019-07-31 11:27 IST   |   Update On 2019-07-31 11:27:00 IST
பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 4 மணிக்கே குவித்த பக்தர்கள் புனித நீராடி விட்டு படி துறையில் அமர்ந்து இறந்த தங்களின் முன்னோர்களை வழிபட்டனர்.
இன்று ஆடி அமாவாசையையொட்டி பொதுமக்கள் இறந்த தங்களது முன்னோர்கள் நினைத்து நீர் நிலைகளுக்கு சென்று வழிபடுவார்கள்.

தென்னக திரிவேணி சங்கமம் என அழைக்கப்படும் மூன்று நதிகள் (காவிரி, பவானி, அமுதநதி) சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடி விட்டு படி துறையில் அமர்ந்து இறந்த தங்களின் முன்னோர்களை வழிபட்டனர்.

மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை படைத்து வணங்கினர். பூஜையில் வைத்த பொருட்களை ஒரே பிண்டமாக பிடித்து அதை காவிரி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். பவானி மற்றும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் ஆற்றில் ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தீயணைப்பு வீரர்கள் பரிசலில் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர்.

ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வாகனங் கள் மூலம் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

இப்படி ஆடி அமாவாசை அன்று அவர்களை வணங்குவதன் மூலம் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

பவானியில் கூடு துறைக்கு இன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்ததையொட்டி பவானி நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது.

இதேபோல் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒருங்கே அமைந்து காவிரி ஆற்றங்கரையோரம் அருள்பாலிக்கும் கொடுமுடி காவிரி ஆற்றிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பிறகு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கொடுமுடி காவிரி ஆற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆற்றில் சிக்கி விடாமல் இருக்க தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலி பெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தனர்.

இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரமும் பக்தர்கள் பலர் குவிந்தனர்.

காவிரி ஆற்றங் கரையோரம் வரிசையாக குடும்பம் குடும்பமாக அமர்ந்து தங்களின் முன்னோர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பிடித்தமான பொருட்களை படைத்து வழிபட்டனர்.

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். 

Similar News