ஆன்மிகம்
வைகாசி பெருவிழாவையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

Published On 2019-04-27 03:23 GMT   |   Update On 2019-04-27 03:23 GMT
வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக வண்ணார மாரியம்மன் விழா, எல்லைக்கட்டுதல், விக்னேஸ்வர பூஜை, வீதி உலா காட்சி நடக்கிறது. இதையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, சிம்மம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 13-ந்தேதி அதிகாரநந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான், 14-ந்தேதி யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானம், 15-ந்தேதி கைலாச வாகனம், கோபுர தரிசனம், திருக்கல்யாணம், பரிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

16-ந்தேதி குதிரை வாகனத்தில் சாமி வீதி உலாவும், முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 17-ந்தேதியும் நடக்கிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கும். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி எழுந்தருளுவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பின்னர் தேர் நிலையை வந்தடையும்.

மறுநாள் (18-ந்தேதி) நடராஜர் தரிசனமும், தீர்த்தவாரியும், 19-ந்தேதி தெப்ப உற்சவமும், 20-ந்தேதி திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News